தஞ்சாவூர், ஜூன் 2 –
அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாது கர்நாடக அணைக்கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் சங்க தலைவர் பழனியப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலக முன்பு சென்ற இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் சிலரை காவல்துறையினர் தாக்கி, வேனில் ஏற்ற முயன்றதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் வலுவடைந்தது. அப்போது விவசாயிகளை காவல் துறையினர் ஒருமையில் பேசியதாலும், தாக்கியதாலும், அதிருப்தி அடைந்த விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் விவசாயிகளை தாக்கிய, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர், காவல் துறையினர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து ஆட்சியாளரிடம் மனு அளிக்க 5 விவசாயிகள் மட்டும் ஆட்சியரத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கலெக்டரின் மனு அளித்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதனிடையே விவசாயிகள் போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வாயிலில் தடுப்புகள் அமைத்து அங்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரித்து உள்ளே அனுப்பினார். அப்போது பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தவர்களில் சிலர் பச்சை துண்டு அணிந்து வந்தனர். அவர்களிடம் பச்சை துண்டு அணிந்து வந்தால் அனுமதியில்லை என காவல்துறையினர் கூறினர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



