மார்த்தாண்டம், ஜூன் 15 –
குமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள கோதையாற்றின் செங்குழிக்கரை என்னும் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக கடந்த 5 மாதங்கள் முன்பு தகவல் பரவியது. இதையடுத்து களியல் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்து முதலை இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் முதலையை பிடிக்க ஆற்றில் கூண்டும் அமைத்தனர்.
நீண்ட நாட்கள் முதலையை பிடிக்க முயன்றும் அது கூண்டில் சிக்கவில்லை. இதையடுத்து முதலையை தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் காணாமல் போன முதலை 4 மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் தென்பட்டது. இந்த செய்தி உடனடியாக வெளியில் பரவி, வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இன்று 15ம் தேதி காலை மீண்டும் பொதுமக்களுக்கு முதலை தனது விஸ்வரூப தரிசனத்தை அளித்துள்ளது. இதை ஏராளமான அப்பகுதி வாசிகள் கண்டு அதை படம் மற்றும் வீடியோ பிடித்துள்ளனர். இதனால் பீதி அடைந்துள்ள மக்கள் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு, அதிக மக்கள் பயன்படுத்தும் கோதையாற்றிலிருந்து முதலையைப் பிடித்து அகற்ற மாவட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



