தஞ்சாவூர், ஏப்ரல் 20 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பயிற்சியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பணியாற்ற உள்ள 12,004 வாக்கு பதிவு அலுவலர்களுக்கு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 226 மண்டல அலுவலர்கள் இணைந்து பயிற்சியை வழங்கினர்.
மேலும் பயிற்சியில் கலந்து கொண்டு வாக்குப்பதிவு அலுவலர்கள், தபால் வாக்கு செலுத்தும் வசதிக்காக அமைக்கப்பட்ட உதவி மையங்கள் மூலம் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். இந்த பயிற்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து கண்காணித்தனர். இந்த பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.



