தஞ்சாவூர், அக்டோபர் 31 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 1 லட்சத்து 83 ஆயிரத்து100 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாளடி பருவத்திற்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 281 டன்னும் தனியார் விற்பனை நிலையங்களில் 847 டன்னும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நெல் வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன் கருதி தேவையின் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு பருவத்தில் 276 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 27ஆம் தேதி வரை 1 லட்சத்து 90 ஆயிரத்து 468 டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை விவசாயிகள் 36 ஆயிரத்து 714 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பயனடைந்துள்ளனர். விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு ரூபாய் 446 கோடி மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.



