தருமபுரி, ஜூன் 15 –
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.905 கோடி மதிப்பீட்டில் தொப்பூர் கணவாய் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கணவாய் பகுதியின் சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியையும் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உயர்மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம் கட்டை மேடு, ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துக்கள் நடக்கும் இரட்டைப்பாலம், எலிவேட்டட்காரிடாரின் முடிவு ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தார்.
இந்தப் பணிகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்கள் ஒரு வழியாகவும், இலகு வாகனங்கள் ஒரு வழியாகவும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது திட்ட செயலாக்க அழகு திட்ட இயக்குனர் சீனிவாசலு, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், துணை காவல் ஆய்வாளர் சிவராமன், உதவி ஆட்சியர் காயத்ரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



