திருப்பூர், மார்ச் 25 –
திருப்பூர் மாநகராட்சி 16 வது வார்டு பிச்சம்பாளையம் புதூர் நால்ரோடு சந்திப்பில் மழைக்காலங்களில் சுமார் இரண்டு அடி தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் அங்கேரிபாளையம் ஸ்ரீநகர் மற்றும் பிச்சம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேலைக்கு செல்வது மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மழைக்காலங்களில் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 15 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் தரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மாற்று வழியில் பொதுமக்கள் சென்று வந்தனர். பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா காணாமல் அவ்வழிப்பாதை அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
அதனை 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி கனகராஜ் முன் நின்று இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழியாக செல்ல ஏதுவாக பணிகளை மேற்கொண்டார். இதனால் பிச்சம்பாளையம் ஸ்ரீ நகர் அங்கேரிபாளையம் செல்லும் பாதையான நால் ரோட்டில் தரைப்பாலம் கட்டி பயன்பாட்டுக்கு வந்ததை பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். மேலும் கடந்த 25 ஆண்டு காலமாக மழைக்காலங்களில் தங்கள் பட்டு வந்த இன்னல்களில் இருந்து விடுபட்டதாகவும் தெரிவித்தனர்.



