தஞ்சாவூர், நவம்பர் 18 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம், கார்த்திகை மாத முதல் சோமவாரமும் பிரதோஷமும் ஒரே நாளில் வந்ததால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் கார்த்திகை சோம வார விழாவையொட்டி சங்காபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கார்த்திகை மாதம் திங்கட் கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கார்த்திகை மாதம் முதல் சோம வாரம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் சன்னதிக்கு முன்பாக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்ட சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையார் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதே நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியும் பெருமாளுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கள பொருள்களால் அபிஷேகம் நடந்தது. சோம வார தினத்தில் பிரதோஷ வழிபாடு என்பதால் அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை போல் வருகிற 24-ஆம் தேதி இரண்டாவது சோம வாரமும், டிசம்பர் 1ஆம் தேதி 3வது சோம வாரம், டிசம்பர் 8ஆம் தேதி 4வது சோம வாரமும், டிசம்பர் 15ஆம் தேதி 5வது சோம வாரமும் நடைபெறுகிறது.



