நாகர்கோவில், ஏப். 2 –
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை 3ம் தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகிறார்.
நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்துவிட்டு கார் மூலம் கன்னியாகுமரிக்கு வரும் அவர் தனியார் தங்கும் விடுதியில் நாளை இரவு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து நாளை மறுநாள் 4 ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி உட்பட மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பேச உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு அன்று மாலை 5 மணிக்கு முதல்வர் சங்கரன்கோவில் செல்கிறார்.



