தஞ்சாவூர், ஜூலை 6 –
தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன் என்று முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தமிழக வேளாண்மை பட்ஜெட்டுக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏயுமான கோவி. செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் முதலமைச்சராகமு.க. ஸ்டாலின் இருந்தபோது இதே தஞ்சாவூரில் பலமுறை விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பதற்கு பல கூட்டங்களை நடத்தி ஒரு பொற்கால ஆட்சியை தந்துள்ளார். அப்போது எதிர்கட்சியினர் யாரும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் இன்றைக்கு திமுக தலைவர், விவசாயிகள் பிரச்சனையை மையமாக நடத்தப்படுகின்ற கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியதால் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டோம். கடந்த காலங்களில் கூட்டம் நடக்கும் போது எந்த அளவிற்கு விவசாயிகள் பிரச்சனையை கேட்டு செயல்படுத்தினோம்.
ஆனால் இன்றைக்கு நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு, புறக்கணிப்பு, எதிர்ப்பு குரல், இவைகள் எல்லாம் இந்த அரசு செவிமடுத்து கேட்டு அதை நிறைவேற்றினால் கடந்த கால சாதனை தொடர அது வாய்ப்பாக இருக்கும். திமுக சார்பில் நாங்கள் நெல் குவிண்டலுக்கு ரூபாய் 3,500, கரும்புக்கு உரிய விலையும் வழங்க வேண்டும் என வற்புறுத்தினோம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இயற்கை பொய்த்து விட்டது. விவசாயம் எங்கே என்ற நிலை தொடர்கிறது. எனவே மும்முனை மின்சார திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
திமுக அரசு இதுபோன்ற மின் இடர்பாடு ஏற்பட்ட போதெல்லாம் சோலார் திட்டத்தை ஊக்குவித்து மானியம் தந்து ஊக்குவித்து விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். எனவே புதிய மின் தட்டுப்பாட்டை காரணம் காட்டி விவசாயிகளை வஞ்சிக்காமல் சோலார் மின் திட்டத்திற்கு அதிக மானியம் தந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் நேரத்தில் கூறும் போது அனைத்து பயிர் கடன்களும் ரத்து எனக் கூறினார். ஆனால் இன்றைக்கு அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த கூட்டுறவு சங்கத்திலும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது எதார்த்த உண்மை. இந்த கோரிக்கைகளை விவசாயிகள் பேசி வருகின்றனர். இதே கோரிக்கையை நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறி, சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விவசாயிகள் பிரச்சனைக்கு தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.



