வேப்பனப்பள்ளி, ஏப். 18 –
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் விறுவிறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி த.வெ.க வேட்பாளர் சம்பங்கி இன்று நரிக்குறவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, தமிழக வெற்றி கழக வேட்பாளர் எஸ்.ஆர் சம்பங்கி வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மகாராஜா கடை, சாமனப்பள்ளி, பீளாளம், எலசேப்பள்ளி, நரசிம்மசாமி கோவில், பெத்தசிகரலப்பள்ளி, கொட்டாயூர், சின்னதின்னூர், ஆருளபள்ளி, சிம்பல்திராடி, முருகனப்பள்ளி, காமன்தொட்டி, நல்லகான கொத்தபள்ளி உள்ளிட்ட 13 கிராமங்களில் விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது திப்பனப்பள்ளி நரிக்குறவர் இனமக்கள் குடியிருந்து வரும் பகுதிகளில் ஊசி மணி, பாசிமணி, மலர்மாலை கட்டியவாறு த.வெ.க வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தார். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி விசில் வழங்கி உற்சாகப்படுத்தினார். நரிக்குறவர் இனபெண்கள் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு விஜக்கு ஆதரவு தெரிவிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
முன்னதாக வேட்பாளர் வருகையையொட்டி மகளிர்கள் விசில் ஊதி ஆர்த்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் அம்ரிஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் மற்றும் அழகேசன், ஆனந்தன், ஜெகன், முருகேசன், மஞ்சு, ஆனந்தன், பாபு, தனம், ஒன்றிய செயலாளர் மகாராஜாகடை சங்கர், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து மகாராஜா கடை பகுதிக்கு சென்ற வேட்பாளர் சம்பங்கி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மலர்த்துவியும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் முன் பேசிய வேட்பாளர் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 40 ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் உற்சாகத்தில் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.



