களியக்காவிளை, ஆக. 27 –
களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயில் கருவறையில் சிவன், பார்வதி அருளாகி வழங்குகின்றனர். கருவறை சுற்றிலும் 12 சிவ லிங்கங்கள் உள்ளன. கோயில் கன்னி மூலையில் கணபதி மண்டபம் உள்ளது. இதில் கணபதி பகவானின் 32 முக பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் உள்ளன.
சிவ பார்வதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாந்தி ஹோமம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று 1008 கோதெங்கத்தில் அஷ்டத்ரவ்ய மகா கணபதி ஹோமம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் தலைமை அர்ச்சகர் குமார் கோயில் நடை திறந்து நிர்மால்ய தரிசனம் செய்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.
கோயில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி கணபதி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்தது. விநாயகர் சதுர்த்தி நாளில் கோயிலுக்கு வருகை தரவும், மகேஸ்வரத்தில் சிறப்பு கணபதி ஹோமத்தைக் காணவும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



