வேலூர், செப். 01 –
வேலூரில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ என்ற ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை 24 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடத் தொடங்கினோம். அப்போது வி.ஐ.டியில் கேரளாவைச் சேர்ந்த 180 மாணவர்கள் படித்தனர். 10 ஆசிரியர்கள் பணி புரிந்தனர். இப்போது 4,160 மாணவர்கள் படிக்கின்றனர். 141 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கல்வியின் மையமாக கேரளாவை கூறலாம். அந்த மாநிலம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. எனக்கும், கேரளாவுக்குமான தொடர்பு 60 ஆண்டுகளுக்கு மேலானது. நான் எம்.பியாக இருந்த போது நாடாளுமன்றத்தில் ஏ.கே. கோபாலன் போன்ற தலைவர்களோடு பழகியுள்ளேன்.
கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் கேரளாவில் முதல் முறையாக தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஆட்சி பிடித்த மாநிலம் என்றால் அது கேரளா தான். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தேர்தல் மூலமாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலம் சிறந்த மாநிலம் ஆகும். அந்த மாநிலம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகிறது. கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளா கல்வியில் முன்னணியில் உள்ளது. கேரளாவில் வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 120 மில்லியன் டாலர் பணத்தை அனுப்புகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பணிபுரிந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புபவர்களில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் முன்னணியில் உள்ளது.
உலகளவில் ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. கேரளாவில் தான் ஓட்டு போடுவதற்கு யாரும் பணம் வாங்குவதில்லை. கேரளா குறைந்த அளவில் ஊழல் உள்ளது.அங்கு வெறும் 20 சதவீத அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 62 சதவீதமாக ஊழல் உள்ளது. மனிதவள குறியீட்டில் இந்தியாவில் கேரளா முதல் மாநிலமாக உள்ளது. கேரளாவில் புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்தை தொழில்துறையில் அதிக முதலீடு செய்யும்போது வேலைவாய்ப்பு பெருகும். இதன் மூலம் தொழில்துறையில் உற்பத்தி மேம்படும். இவ்விஷயத்தில் கேரளா அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் பேசும்போது, “கேரளாவில் வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு சமூக நீதிக்காகப் போராடி கவனத்தை ஈர்த்தார். கேரளாவைச் சேர்ந்த எம்ஜிஆரை தமிழகத்துக்கு கொடுத்தது கேரளா தான். அவர் தமிழக முதல்வராக இருந்த போது தான் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. அவர் தான் விஐடி கல்வி நிறுவனம் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார்” என்றார்.
சிறப்பு விருந்தினராக நடிகையையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன், கவுரவ விருந்தினராக எழுத்தாளர் புஷ்பா குருப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து தனிமா கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ரம்யா நம்பீசன் மலையாளத்தில் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தார். தனிமா நிகழ்ச்சியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, மாணவர் நல இயக்குநர் நைஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.



