குளச்சல், பிப். 26 –
குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலையில் டால்பின் மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. சுமார் 5.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்ட அந்த மீனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் சைமன்காலனியில் உள்ள மீன் பிடி பயிற்சி நிறைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் குளச்சல் மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் பிரிஜில் கிராஸ், சைமன்காலனி மீன்பிடி பயிற்சி நிலைய மேற்பார்வையாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி அன்பு உத்தரவின் பேரில் குலசேகரம் வன சரக வன பாதுகாவலர் பூவரசன், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், குலசேகரம் வன செயலாளர் ராமு, வனவர் பாலமுருகன் ஆகியோர் இன்று கோடிமுனைக்கு வந்தனர்.
பின்னர் இறந்து கரையொதுங்கிய டால்பினை கால்நடை மருத்துவர் மனோகரன் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கடறகரையோரம் பெரிய பள்ளம் தோண்டி டால்பினை புதைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு டால்பின் எப்படி இறந்தது ? என்பது தெரியவரும் என தெரிவித்தனர். மேலும் இறந்து ஒதுங்கியது பெண் டால்பின் எனவும், இது கருப்பு வகையான இனத்தைச் சேர்ந்தது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.



