தேனி, மே 25 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.05.2026), பொதுமக்கள் தங்கள் குறைகள் / கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் (9487771077) சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை எளிதாகவும், விரைவாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வராமல், தங்களது கைப்பேசி மூலமாகவே குறைகளை பதிவு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் (9487771077) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.
இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவுநீர் வடிகால், சுகாதாரம், வருவாய் தொடர்பான பிரச்சினைகள், பொது விநியோக திட்டம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோக்கள் வடிவில் அனுப்பலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 24X7 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும் புகார் தெரிவிக்கும் நபர்களுடைய பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் பாதுகாக்கப்படும்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் சிறிய அளவிலான மற்றும் அன்றாட தேவைகள் தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும். அதிக நிதி தேவைப்படும் பணிகள் தொடர்பான புகார்களுக்கு திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதால், அவற்றை நிறைவேற்ற சிறிது காலம் எடுத்துக்கொள்ளப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்படும்.
தேனி மாவட்ட மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ்-அப் புகார் எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



