மார்த்தாண்டம், நவ. 7 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தினசரி காலை மாலை பூஜைகள் மற்றும் விசேஷ தினங்களான பிரதோஷம், திருவாதிரை, மாத சிவராத்திரி, பவுர்ணமி உட்பட விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
மார்கழி மாதம் பத்து நாட்கள் திருவாதிரை திருவிழா மற்றும் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் இந்த கோயில் மஹாபாரத கால தொடர்பு உடைய பழைமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் வழக்கம் போல் நேற்று இரவு கோயில் நடையை தலைமை அர்ச்சகர் கிருஷ்ண மூர்த்தி அடைத்து சென்றார்.
இன்று காலை அர்ச்சகர் வழக்கம் போல நடை திறக்க வந்தபோது கோயில் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேக தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டாலும் பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இந்த கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் இரவு பாதுகாவலர் நியாமிக்காதது திருட்டு முயற்சி நடக்க காரணமாக அமைந்தது என்று பக்தர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவும் சில பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது என புகார் எழுந்துள்ளது.



