நாகர்கோவில், டிச. 8 –
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாள் இந்தியா முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் படை வீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து அரசு நன்றி பாராட்டி வருகிறது. கொடி நாளில் திரட்டப்படும் நிதியை போர்க்களத்தில் உயிர்நீத்த படை வீரர்கள், அவர்கள் வாரிசுகள், கைம்பெண்கள், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் விதவைகளின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு கொடி நாள் வசூல் செய்ய அரசால் குமரி மாவட்டத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 47 லட்சத்து 95 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஒரு கோடியே 50 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வருடமும் தொடர்ந்து மக்கள் கொடிநாள் நிதி உதவி செய்து வழங்க வேண்டும் என கலெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கொடிநாள் செய்தி மற்றும் கொடிநாள் மலரை மாவட்ட முன்னாள் படை வீரர் துணை இயக்குனர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



