மார்த்தாண்டம், ஆக. 6 –
குழித்துறை பகுதி வழியாக பாய்ந்து செல்லும் ஆறு காப்புக் காடு, மங்காடு வழியாக தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் ஏராளம் குடிநீர் கிணறுகள் உள்ளன. இந்த ஆற்றுத் தண்ணீரைத் தான் மேற்கு மாவட்ட பகுதிகளில் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவு நீர் மற்றும் கழிப்பிட கழிவுநீர் போன்றவை வடிகால் வழியாக குழித்துறை ஆற்றில் கலக்கிறது. இதுபோன்று குழித்துறை கோர்ட் வளாகத்தின் கழிவுநீரும் சாலை வழியாக பாய்ந்து ஆற்றில் சேர்க்கிறது. இவற்றை கண்டித்து குழித்துறை நகர பாரதிய ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
குழித்துறை நகர பாரதிய ஜனதா தலைவர் சுமன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் நந்தினி, நகராட்சி கவுன்சிலர்கள் விஜி, ரத்தினமணி, மினிகுமாரி, ஜெயந்தி, செல்வகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



