மார்த்தாண்டம், ஜூலை 18 –
அருமனை அருகே உத்தரங்கோடு பகுதியில் நேற்று பையுடன் சிறுவன் ஒருவன் சுற்றித்திரிந்தான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும் மேல்பாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பதாக சிறுவன் கூறினான். அந்தப் பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த கல்வியாண்டில் அங்கு படித்து வந்ததாகவும், பின்பு பள்ளிக்கு வரவில்லை என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
தொடர்ந்து நிமிர் குழுவினருக்கு போலீசார் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த எஸ்ஐ புஷ்பா தலைமையில் குழுவினர் விசாரித்ததில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுவன் பள்ளிக்கு சரிவர செல்லாத காரணத்தால் தக்கலை அருகே மணலி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் சேர்த்து தங்கி படித்து வந்த மாணவன் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் குழுவினர் சிறுவனை பெற்றோருடன் ஒப்படைத்தனர்.
அப்போது தனது தாயைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும், அதனால் தான் விடுதியில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குதித்து வீட்டிற்கு செல்லலாம் என நினைத்து, வழி தவறி சென்று விட்டதை கூறினார். தொடர்ந்து சிறுவனை வரும் 20ம் தேதி நாகர்கோவில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து வரும்படி மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.


