தஞ்சாவூர், ஜூலை 28 –
தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா மாநில போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள கிட்டு கால்பந்து மைதானத்தில் அகில இந்திய அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி 6 நாட்கள் நடந்தது. தினமும் மாலை 6 மணி தொடங்கி இரவு 1 மணி வரை மின்னொளியில் போட்டிகள் நடந்தன. நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் சிட்டி யூனியன் வங்கி, சிவசிதம்பரம் பிள்ளை ஜூவல்லரி இணைந்து நடத்தி, போட்டியை தொழில் அதிபர் ரவிவம்பாளியார் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழகம், ஆந்திர, கேரளா, கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த 20 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப்போட்டிக்கு கேரள போலீஸ் அணியும், தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கால்பந்து அணியும் தகுதி பெற்றது. இறுதிப் போட் டி விறுவிறுப்பாக நடந்தது.
இதில் கேரளா போலீஸ் அணி 1-0 என்ற கோள்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கால்பந்து அணி 2வது இடத்தையும், யுனைடெட் கேரளா கால்பந்து அணி 3வது இடத்தையும், தமிழ்நாடு போலீஸ் அணி 4வது இடத்தையும் தட்டி சென்றது. இறுதிப்போட்டியை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூபாய் 2, இலட்சத்து 22 ஆயிரமும், 2வது பரிசாக ரூபாய் 1 இலட்சத்து 11 ஆயிரமும்,3 வது பரி சாக 66 ஆயிரமும்,4 வதுபரிசாக 33 ஆயிரம் வழங்கப்பட்டன.
இது தவிர அதிக கோள் அடித்தவர், சிறந்த வீரர், சிறந்த அணிகளுக்கும், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மெடல் என மொத்தம் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி கால்பந்து கழக செயலாளர் முருகதாஸ் மற்றும் கால்பந்து அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.



