நாகர்கோவில், ஜன. 20 –
தென்னகரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் இன்று காலை கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அவர் பார்வையிட்டார். கன்னியாகுமரியில் தற்போது கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணிகள், கூடு தல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தவிர கன்னியாகுமரி ரயில் நிலையத்தை விமான நிலையத்திற்கு இணையாக அழகுபடுத்தும் மேம்பாட்டு பணிகளும் நடக்கின்றன. இந்த பணிகளையும் பொது மேலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் அவர் நாகர்கோவில் புறப்பட்டார். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார்.
பின்னர் கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகளை சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு செய்தார். இரணியல், குழித்துறை பகுதிகளில் ஆய்வு செய்த அவர் பின்னர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரயில் பாதை பணியில் தற்போது கன்னியாகுமரி முதல் ஆளூர் வரை பணிகள் முடிவடைந்து இருக்கிறது.
இதே போல் பாறசாலை முதல் திருவனந் தபுரம் வரை 70 சதவீத பணிகள் முடிவடைந்து இருக்கின்றன. இடைப்பட்ட பகுதியில் பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மூன்றாவது ரயில் பாதை திட்டம் தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.



