குளச்சல், மார்ச் 23 –
குளச்சல் அருகே குறும்பனை சிலுவையார் தெருவை சேர்ந்தவர் சிஜின் மோன் (27). மும்பையில் மரைன் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேரி கிபிலின்சா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மேரி கிபிலின்சா தூங்கி எழும்பும்போது, அங்கு இருந்த பீரோ அருகே மர்ம நபர் ஒருவர் கையில் பெட்டியுடன் நின்றுள்ளார். அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து மாமியார் குடும்பத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து, பெட்டியுடன் தப்பி ஓடி விட்டார்.
குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து அதன் மூலம் வீட்டிற்குள் நுழைந்து, பீரோவை திறந்து அதிலிருந்து சுமார் 46 பவுன் நகைகள் அடங்கிய நகை பெட்டியை கொள்ளை அடித்து விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொள்ளையன் வந்த பைக் வீட்டின் பின்புறம் நின்றது. பதட்டத்தில் கொள்ளையன் பைக்கை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் பைக் பறிமுதல் செய்து, அதன் பதிவு எண்ணை வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா ஆர்.நங்லட் மேற்பார்வையில் குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்டது முட்டம் பகுதியை சேர்ந்த தாசன் என்பவரது மகன் சகாய ஜோஸ் ஆண்டனி என்பவர் என்று தெரிய வந்தது. குற்றவாளியை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருட்டுப் போன முழு நகைகளும் மீட்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றி குற்றவாளி கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.



