தஞ்சாவூர், ஏப்ரல் 29 –
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
2026-27ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டில் ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் தனியார், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும்.
1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு 3 நாள் பணி இடை பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் 1 முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
எனவே மேற்கண்ட அறிவுரைகள் பின்பற்றி அனைத்து வகையை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். விடுமுறை நாட்களில் துறையின் உத்தரவுப்படி செயல்பட வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



