நாகர்கோவில், நவ. 17 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பல பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து வருகிறது. குறிப்பாக பூநாரை (பிளமிங்கோ) உள்ளான், வாத்து வகைகள் அதிகம் வருவது வழக்கம். இதில் பூநாரை ஈரான், கஜகஸ்தான் நாட்டிலிருந்தும், உள்ளான்கள் ரஷ்யா, சைனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் குமரிக்கு வருகிறது. இந்தப் பறவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வருவது வழக்கம். அந்த நாட்டில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும் போது ஒவ்வொரு இனங்களாக குமரிக்கு இடம் பெயர்ந்து வருவது வழக்கம்.
குமரிக்கு வரும் பறவைகள் ஏப்ரல் மாதம் வரை இங்கேயே இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் சுசீந்திரம், தேரூர், மணக்குடி காயல் பகுதி போன்றவை வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.
குமரி மாவட்ட வன அலுவலர் அன்பு உத்தரவின் படி பூதப்பாண்டி வனசரக அலுவலர் அன்பழகன் தலைமையிலான வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பாண்டிச்சேரி பல்கலைகழக மாணவர்கள் குழுக்கள் இணைந்து அச்சங்குளம், பறக்கை, பால்குளம், சுசீந்திரம், நரிகுளம், தேரூர், தத்தையார்குளம், மாணிக்கம் புத்தேரி குளம், புத்தளம், கோவளம் சுவாமி தோப்பு உப்பளம் மற்றும் வேம்பனூர் ஆகிய நீர் நிலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.



