கோவை, மார்ச் 26 –
பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிரைவர், அலுவலக உதவியாளர், துப்புரவு மற்றும் தோட்ட பணியாளர் என 450 பேர் வேலை செய்கின்றனர். நிரந்தர பணியாளர் ஊதியம் இவர்களுக்கு கிடையாது. கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியமும் இதுவரை வழங்கவில்லை.
பாரதியார் பல்கலை பணியாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. சர்வதேச மாணவர் விடுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட கோப்புகள் மூன்று மாதங்களுக்கு மேலாக துணைவேந்தர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன. சில டிரைவர்களுக்கு இரண்டு மாதம் வரை ஊதியம் வழங்கவில்லை.
பணி நீட்டிப்பு ஆறு மாதத்துக்கு பதில் மூன்று மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஊதியம் கிடைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும். இவ்வாறு ரமேஷ்குமார் தெரிவித்தார். மேலும், ஏழை எளிய தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வரும் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.


