தஞ்சாவூர், ஏப்ரல் 15 –
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளம்பெரம்பூர் கிராமத்தில் மீன் வளர்ப்பு குட்டை யில் காணப்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளப்பெரம்பூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் அந்த பகுதியில் மீன் வளர்ப்பு குட்டையை பராமரித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் அந்த குட்டையில் முதலை ஒன்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சசிகுமார் தஞ்சாவூர் மாவட்டம் பேரிடர் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து இந்த தகவலை அவர்கள் வனத்துறைக்கு தெரியப்படுத்தினர்.
தகவலின்படி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவின்படி வன சரகர் ஜோதி குமார் மேற்பார்வையில், வனவர் இளையராஜா, வனகாவலர் வெற்றிவேல் ஆகியோருடன் அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவன சதீஷ்குமார், ராஜேந்திரன், மீட்பாளர்கள் குலோத்துங்கள், விஸ்வ பிரேம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது மீன் வளர்ப்பு குட்டை யில் இருந்த குட்டி முதலையை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடித்தனர். அந்த முதலை 110 செ.மீட்டர் நீளத்துடன் காணப்பட்டது. மேலும் பெண் முதலையாக இருந்தது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், அந்த முதலையை பாதுகாப்பாக கொண்டு சென்று கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.



