கன்னியாகுமரி, டிச. 1 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் அரசு வேலைக்கு முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணின் தந்தையிடம் நான் ரயில்வேயில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உயர் அதிகாரிகள் பலரைத் தெரியும். ரூபாய் 25 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதை நம்பிய பெண்ணின் தந்தை மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரபாகரனின் வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூபாய் 25 லட்சம் வரை அனுப்பி உள்ளார். இந்நிலையில் மீண்டும் பணம் தேவைப்படுவதாக பிரபாகரன் கேட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் தந்தை ஐந்து பவுன் நகையை கொடுத்து உள்ளார். பணம் நகை கொடுத்து ஒரு ஆண்டுகள் ஆகியும் பிரபாகரன் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த பெண்ணின் தந்தை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் கொடுத்தார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பந்தப்பட்ட ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து பிரபாகரனை தேடி வந்த நிலையில் அரக்கோணம் பகுதியில் வைத்து பிரபாகரனை போலீசார் கைது செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர், மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
பிரபாகரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர் வேலை வாங்கி தருவதாக பல இளம் பெண்களை வரவழைத்து ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



