தஞ்சாவூர், ஏப்ரல் 20 –
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு அதிக ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 56 வயதான விவசாயி வயிற்று வலி காரணமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஆர்ட்டோகிராம் பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்று பகுதியில் உள்ள முக்கியமான ரத்தநாளமான பெருந்தமனி ஆபத்தான அளவில் விரிவடைந்து அபாயகரமான நிலையில் வெடிக்கும் தருவாயில் பெருதமனி வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால் நோயாளிக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரி முதல்வர் பூவதி வழிகாட்டுதலின் கீழ், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் சண்முக வேலாயுதம், மயக்க மருத்துவ துறையின் தலைவர் சாந்தி பால்ராஜ் ஆகியோரால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. டாக்டர்கள் மோகன் ராஜா, முரளி, கபிலன் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றனர்.
வெற்றிகரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பெருந்தமனியின் பகுதி செயற்கை நாளத்தால் மாற்றப்பட்டு, வெடிப்பு ஏற்படும் அபாய முற்றிலும் நீக்கப்பட்டது. தற்போது நோயாளி பூரணகுலம் குணமடைந்து முழு நலத்துடன் உள்ளார். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூபாய் 10 லட்சம் வரை செலவாகும் என்றும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் அமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டத்தின் கீழ் இச்சிகிச்சை முழுவதும் இலவசமாக செய்யப்பட்டது என்றும், டாக்டர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவினரை முதல்வர் பூவதி பாராட்டினார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



