நாகர்கோவில், ஜூலை 10 –
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்குட்பட்ட இரையுமன்துறை பகுதியில் பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது ரூ. 116.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 85% பணிகள் முடிக்கபட்டு மீதம் உள்ள பணிகள் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக பிரதான அலைதடுப்புச் சுவர் நீட்டிப்பு பணி (பகுதி II) நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதி வழியாக செல்லும் ஏ.வி.எம் கால்வாயினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில்: குமரி கடற்கரை வழியாக செல்லும் ஏ.வி.எம் கால்வாய் 34 கிலோ மீட்டர் அமைந்துள்ளது. தற்போது இந்த கால்வாய் மிகவும் மோசமான நிலையில் தண்ணீர் நீரோட்டம் தடைபட்டு பாசி நிறைந்தும், தண்ணீர் துர்நாற்றம் வீசியும், குப்பைகள் குவிந்தும் தண்ணீர் மாசடைந்து சுகாதாரம் சீர்கேடு ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்துள்ளது.
கால்வாயின் பாசிகளை அகற்றி நீரோட்டத்திற்கு இருக்கும் தடைகளை நீக்கி குப்பைகளை அகற்றி தூர்வாரி சீர்படுத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்றம் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நீரோடி முதல் இரையுமன்துறை வரை ஏ.வி.எம். கால்வாயினை பொது சுகாதார அவசர அவசிய தேவையினை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் சீரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியினை மேற்கொள்ள 25.03.2025 ல் சட்டமன்ற அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் கால்வாய் தூர்வாருவதற்கு சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து மற்றும் நிறுவனத்திடமிருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் துணை இயக்குநர்கள் கோபிநாத் (கன்னியாகுமரி), காசிநாத பாண்டியன் (ஈரோடு), கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் சங்கர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



