மார்த்தாண்டம், ஆக. 5 –
கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழக பகுதிகளில் இருந்து பல ஆண்டுகளாக கனிமவளங்கள் லாரி லாரியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான லோடுகள் கேரள உட்பட்ட அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதனால் பெரும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இது மத்திய அரசின் டிரான்ஸ்போர்ட்சிங் பாலிசி, ஆகவே தமிழக அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தவெக தலைமையிலான தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு கேரள உட்பட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லங்கோடு வழியாக அதிக அளவில் எம் சான்ட் உள்ளிட்ட கனிம வள வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் தனிப்படையினர் ஆதரவுடன் அந்த கனிம லாரிகள் அனைத்தும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.
இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை கிராம பகுதி வழியாக கேரளாவிற்கு தடையை மீறி கனிமவளம் கொண்டு செல்லும் வாகனத்தை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது வைரலாகி வருகின்றது. அதில் தினம் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கேரளாவுக்கு கடத்துவதாகவும், போலீசோ அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.
மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவானதும் சாரை சாரையாக கனிம லாரிகள் கேரளாவுக்கு படையெடுப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. குமரியில் வேலியே பயிரை மேய்வது போல இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார், அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


