மார்த்தாண்டம், ஏப். 6 –
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விதுர என்ற பகுதியை சேர்ந்தவர் கிரி (46). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி குழந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த கிரி, நீண்ட காலமாக பேச்சிப்பாறை பகுதியில் தனியார் ரப்பர் தோட்டங்களில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பேச்சிப்பறை அருகே நடனம்பொற்றை என்ற பகுதியில் வைத்து கிரிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே தரையில் படுத்து உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் எழும்பாததால் அப்பகுதியினர் சென்று பார்த்தபோது எந்தவித சலனமும் இன்றி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அப்பகுதியினர் பேச்சிப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிரியின் உறவினர்கள் குறித்து விசாரித்து, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


