களியக்காவிளை, மார்ச் 17 –
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையம் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை அறிவித்தது.
அதன்படி கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி மற்றும் தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை இணைந்து வாகன சோதனைகள் மற்றும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளன. மேலும் தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள களியக்காவிளை உள்ளிட்ட 9 போலீஸ் சோதனைச் சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் இணைந்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.



