மதுரை, ஜூலை 2 –
தென் தமிழகத்தில் முதன்முறையாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் காது, மூக்கு, தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர்கள், மைக்ரோடியா (Microtia) எனும் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த 16 வயது சிறுவனின் காதை, அவனது விலா எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்துள்ளனர். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, பொதுவாக பல கட்டங்களாகச் செய்யப்படும் இந்த சிக்கலான 3D காது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை, மருத்துவக் குழுவினர் ஒரே கட்ட அறுவை சிகிச்சை அமர்வில் வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். வலியையும், மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குறைத்து, விரைவான குணமடைதலுக்கு இதுவழிவகுத்துள்ளது.
இந்த மேம்பட்ட நுட்பத்திற்காக ஜப்பானில் சிறப்புப் பயிற்சி பெற்ற காது, மூக்கு, தொண்டை (ENT) சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் D.R நாகேஸ்வரன் அறுவைசிகிச்சை குழுவிற்கு தலைமை வகித்தார். இது குறித்துப் பேசிய டாக்டர் நாகேஸ்வரன், சுமார் 10,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இயல்பான காது வளர்ச்சி இல்லாத (மைக்ரோடியா) பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறினார்.
குறிப்பிட்ட சமூகங்களில் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. முகத்தில் தெரியும் இந்தக் குறைபாடால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும்பெரும் சுமையை சுமத்துகிறது. மனித உடலில் 12 இணை விலா எலும்புகள் இருந்தாலும், இந்த அறுவை சிகிச்சைக்குச் சில குருத்தெலும்புப் பகுதிகள் மட்டுமே தேவைப்படுகின்றன.” என்று டாக்டர் நாகேஸ்வரன் விளக்கினார்.
“இந்த சிறுவனுக்கான சிகிச்சையில், நாங்கள் நான்கு விலா எலும்புகளிலிருந்து மட்டுமே குருத்தெலும்புகளை எடுத்தோம். இந்த அறுவை சிகிச்சையினால் குருத்தெலும்பு எடுக்கப்பட்ட இடத்தில் மிகச்சிறிய தழும்பே ஏற்படும்; மேலும் இது விலா எலும்புக்கூட்டின் வலிமையையோ அல்லது நிலைத்தன்மையையோ பாதிக்காது,” என்று அவர் மேலும் கூறினார். மைக்ரோடியாவுடன் தொடர்புடைய கேட்கும் திறன் குறைபாட்டை ஆரம்பகாலத்திலே கவனித்தால், பெரும்பாலும் சரிசெய்ய முடியும் என்பதையும் டாக்டர் நாகேஸ்வரன் வலியுறுத்தினார்.
“காக்லியர் இம்ப்ளான்டேஷன் மற்றும் பிற செவித்திறன் மீட்பு வழிமுறைகள் உட்பட, கேட்கும் திறனை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, பொருத்தமுள்ளதாக கருதப்படும் குழந்தைகளுக்குச் செவிக்கிறனை மேம்படுத்துவதில் சிறந பலன்களை அளிக்கும்.”என்று கூறினார்.
இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை விளக்கிய மருத்துவ நிர்வாகி டாக்டர் B. கண்ணன். அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தைப் பற்றி நாங்கள் “எமது மருத்துவர்கள் குழுவின் பெருமிதம் கொள்கிறோம். தென் தமிழகத்தில் இவ்வளவு சிக்கலான 3D காது மறுசீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்றார்.



