நாகர்கோவில், மே 15 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசு உடைமையாக்கப்பட்ட 19 பைக்குகள் உட்பட மொத்தம் 23 வாகனங்கள் ஏலம் மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின் முன்னிலையில் வருகிற 19.5.2026 காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 19.5.2026 காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவு கட்டணமாக ரூ. 10 செலுத்த வேண்டும். ஏலம் நடத்துவதற்கு முன்பே வாகனங்களை நன்றாக பார்த்து பரிசோதித்து வாங்கிக் கொள்ளலாம்.
வாகனங்கள் இருக்கும் நிலையில் தான் ஏலம் விடப்படும். ரூ. 5 ஆயிரம் செலுத்தியவர் ஒரு வாகனத்தை ஏலம் எடுத்திருந்தால், அடுத்த வாகன ஏலத்தின் கலந்து கொள்ள மறுபடியும் ரூ.5 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் எடுத்த வாகன மதிப்பில் முழு தொகையில் கால் பங்கு ஏலம் எடுத்தவுடன் செலுத்த வேண்டும். மீதி முக்கால் பங்கு தொகை ஏலம் உறுதி செய்த கடிதம் கிடைத்தவுடன் விற்பனை வரி 18 சதவீதத்துடன் இரு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
முழுத் தொகையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறும் பட்சத்தில் அவர் எடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, அவர் கட்டிய கால்பங்கு பணம் அரசுக்கு வங்கி மூலம் செலுத்தப்படும். ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த வாகனத்தையும் எடுக்கவில்லை என்றால் முன் பணம் ரூ. 5 ஆயிரம் எந்த கமிஷன் இல்லாமல் ஏலம் நடக்கும் அன்றே திரும்ப வழங்கப்படும்.
ஏலம் விடப்பட்ட வாகனத்தில் எந்த குறை இருந்தாலும் ஏலம் எடுத்தவரின் பொறுப்பு ஆகும். ஏலம் எடுத்த வாகனம் திரும்ப பெறப்படாது. ஏலம் விடப்பட்ட வாகனத்தை ஏலம் எடுத்தவர் ரசீதையும், உத்தரவு நகலையும் (ஆயுதப்படை) டிஎஸ்பியிடம் காண்பித்து உடனடியாக வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


