திருத்துறைப்பூண்டி, ஜனவரி 13 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலர் வருகைக்காக, நீண்ட நேரமாக கொட்டும் மழையில் காத்திருந்த வாகன ஓட்டிகள். திருத்துறைப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் தண்டலச்சேரியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் இரு தினங்கள் மட்டுமே இந்த அலுவலகம் இயங்கும்.
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் எடுக்க புதுப்பிக்க, வாகன தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேரடியாகவும், பயிற்சி பள்ளி வாயிலாகவும் இங்கு தினந்தோறும் 300-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
வாகனத்தை ஓட்டி காண்பிக்க மற்றும் வாகனங்களை ஆய்வு செய்ய போதிய இடம் இல்லாததால்,
திருத்துறைப்பூண்டி புது பைபாஸ் சாலையில் நிறுத்தி ஆய்வு செய்வர்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், ஒதுங்க இடமில்லாமல் கனமழையில் நனைந்து 11 மணி வரை ஆர்டிஓ வருகைக்காக பைபாஸ் சாலையில் காத்திருந்தனர். மழையில் நனைந்து சிரமப்படுவதாலும், சாலையில் நிற்பதால் விபத்து ஏற்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வட்டார போக்குவரத்து அலுவலத்தை
தனியார் கட்டிடத்தில் இயக்காமல் விரைவாக புதிய கட்டிடம் கட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



