நாகர்கோவில், டிச. 9 –
குமரி மாவட்டத்தில் அண்மையில் பருவ மழை காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து அணைகளுக்கு வரும் நீர்வரத்து சீராக உள்ளது.
இந்த சூழலில் விவசாயத்திற்காக பாசனத்தின் தேவை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் அணைகளில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். அணைகளில் போதுமான நீர் இருப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கீழ்மட்ட கால்வாய் பாசன பகுதிகளான கோதையாறு பிரதான கால்வாய் மற்றும் அதனுடன் இணைந்த கிளை கால்வாய்களின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறையில் இருந்து வினாடிக்கு 699 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கன அடி வரை தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக அதிகபட்சம் 800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது 1100 நூறு கன அடியாக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாகுபடிகள் தடை இன்றி நடைபெறும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


