கிருஷ்ணகிரி, ஏப். 29 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட 51.ஊத்தங்கரை தனி, 52.பர்கூர், 53.கிருஷ்ணகிரி, 54.வேப்பனஹள்ளி, 55.ஓசூர், 56.தளி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு மத்திய காவல் படையினர் மற்றும் காவல் துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை சார்பில், பாதுகாப்பு அறைகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம், நுழைவாயில்களில் 24 மணிநேரமும் செயல்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் தங்களின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறைகளை சிசிடிவி கேமரா மூலம் பார்வையிடும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்தியாளர்கள், தொலைக்காட்சியினருக்கு ஊடக மையம் தனியாக அமைக்கப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆறு சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், தனி வட்டாட்சியர் சம்பத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.



