நாகர்கோவில், மார்ச் 17 –
குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: பாரபட்சம் இன்றி தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைக்குரிய இடம், நபர்கள் அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல், பறக்கும் படையினரை முறையாக கையாளுதல், எல்லையோர சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா இயங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.
சோதனை சாவடிகளில் தேர்தல் ரீதியிலான வாகன சோதனையை மேற்கொள்ளுதல், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், சரித்திர பதிவேடு குற்றவாளியை கண்காணித்தல், நன்னடத்தை பிணை பெறுதல் முந்தைய தேர்தல் வழக்குகளில் தொடர்பு உடையவர்களை கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



