நாகர்கோவில், செப்டம்பர் 24 –
வடசேரி பஸ் நிலையம் அருகே கார் பார்க்கிங் வசதியுடன் கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான 167 பைல் பவுண்டேஷன் (பில்லர்) அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தொலைதூரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் அண்ணா பஸ் நிலையம் சென்று டவுன் பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் வடசேரி கனகமூலம் சந்தையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாநகர பகுதியில் வாகன பார்க்கிங் செய்வதற்கு இடம் போதுமான வகையில் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வடசேரி பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் கடைகள், இருசக்கர, நான்கு சக்கர வாகன பார்க்கிங் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதையடுத்து அதற்கான திட்டம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி ரூ.8 கோடியே 90 லட்சம் செலவில் 100 கடைகள், கடைகளின் மேல் பகுதியில் 155 பைக்குகள், 30 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடங்கி இருக்கிறது. வடசேரி பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் கடந்த காலத்தில் குளமாக இருந்த பகுதி ஆகும்.
இதனால் பவுண்டேஷன் அமைத்து கட்டுவதை விட்டுவிட்டு பைல் பவுண்டேஷன் அமைத்து இந்த கட்டுமான பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. தரையின் கீழ் பகுதியில் 10 மீட்டர் தூரத்திற்கு து துளையிட்டு, அதில் பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் மொத்தம் 167 பைல் பவுண்டேஷன் அமைகிறது. முதல் கட்டமாக 28 பைல் பவுண்டேசன் அமைப்பதற்கு துளை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
167 பைல் பவுண்டேஷன் அமைத்த பிறகு அனைத்து பை பைல் பைல் பவுண்டேஷனையும் ஒருங்கிணைத்து, பெல்ட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது. இந்த பணிகளை ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்தால் அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


