நாகர்கோவில், ஜூன் 29 –
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை சார்பில் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதத்தடுப்பு சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று 28ம் தேதி நடைபெற்றது. இம்முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: 1997ஆம் ஆண்டிற்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டறியப்படவில்லை. இந்த ஆண்டு இச்சிறப்பு முகாம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்முகாமில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 847 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இம்முகாம்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5048 பணியாளர்கள் (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி) பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 17 நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மாவட்ட பொது சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



