நாகர்கோவில், ஜூன் 9 –
உலக பிரசித்தி பெற்ற இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகின்றனர். இந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமாக வருகின்றனர் இவர்கள் விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் வந்து இறங்கி அங்கிருந்து வாடகை கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். மேலும் சிலர் அண்டை மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த கார் மூலம் வருவது வழக்கம்.
அவ்வாறு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான பார்க்கின் வசதி இல்லாமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு உள்ள பீச் ரோடு பார்க்கிங்கில் கன்னியாகுமரி நகராட்சியால் கார்பார்க்கில் வசதி செய்து தரப்பட்டுள்ளது ஆனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கார் பார்க்கிங்யில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அதன் நுழைவு பழுதடைந்து இருப்பதால் உள்ளே செல்லும் கார் வேன் போன்றவற்றின் அடிப்பாகங்கள் தட்டி உடைகின்றன. தினம்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இருந்தும் பார்கிங் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நகராட்சி வருமானத்தில் முக்கிய பங்காக இருந்து வரும் சுற்றுலாத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் செல்வதற்கான பாதையை நகராட்சியால் சரி செய்ய முடியாத நிலை மிகவும் வேதனை அளிப்பதாக சுற்றுலா பயணிகள், சுற்றுலா பயணிகளின் வாகன ஓட்டிகள் தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி கூறியதாவது: உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளம் என அனைவராலும் அறியப்பட்ட கன்னியாகுமரிக்கு நாங்கள் குடும்பமாக முதல்முறையாக வந்துள்ளோம். இங்கு வந்தால் கார் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் இருந்தும் எங்களுடைய காரை பார்க்கிங் கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் என்னுடைய கார் சிறியது இந்த கரடு முரடான வழியாக கொண்டு சென்றால் அடியில் பிடித்து காரின் சில பாகங்கள் உடைந்து விடும். எனவே நாங்கள் வெளியே நிறுத்தி உள்ளோம்.
நாங்கள் கார் நிறுத்தி உள்ள பகுதி போக்குவரத்து காவல்துறையால் நோ பார்க்கிங் என குறிப்பிட்டு இருந்த பகுதியாகும். இருந்தும் வேறு வழி இல்லாமல் அங்கே நிறுத்தி உள்ளோம் போக்குவரத்து காவல்துறை நிச்சயம் எங்களுக்கு அபராதம் விதிப்பார்கள் வேறு வழி இல்லை கன்னியாகுமரியை பார்க்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு பெரியதாக இருந்ததோ அதே போல ஏன் இங்கு வந்தோம் என்று எண்ணம் தோன்றி விட்டது.
ஒருமுறை வந்தவர்கள் மறுமுறை இப்பகுதிக்கு வர வேண்டுமானால் நகராட்சி சுற்றுலாத்தலத்தை தூய்மையாகவும், சுற்றுலா பயணிகளுக்கும் அவர்களுடைய வாகனங்களுக்கும் சிறப்பான பார்க்கங்கை ஏற்படுத்தி பாதுகாப்பை வழங்க வேண்டும் என தெரிவித்த அவர் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியாது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே சுற்றுலா பயணிகளின் நலனில் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதுவே எங்களுடைய கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.



