தென்காசி, மார்ச் 25 –
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த மாரிசாமி – வேல்மயில் தம்பதியினரின் 4 வயது குழந்தையான யாழினி ஸ்ரீ என்ற சிறுமி புளியங்குடி சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த நிலையில் பள்ளி வளாகத்திற்குள் சிறுமி மீது சொகுசு கார் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளி வளாகத்திற்குள் சிறுமி விபத்தில் சிக்கியது எப்படி? இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறி சிறுமியின் உறவினர்கள் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மாற்று பாதையில் போக்குவரத்து இயக்கப்பட்டன. மேலும் சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணை முடிவுக்கு பிறகு குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவான் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



