கிருஷ்ணகிரி மாவட்டம், அக். 9 –
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியம், கவுண்டனூர் ஊராட்சியில், விதைகள் நாற்றாங்காலில், பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை மரங்கள் வளர்ப்பு அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், மத்தூர் ஊராட்சி ஒன்றியம், கவுண்டனூர் ஊராட்சியில், அமைந்துள்ள பெணுகொண்டாபுரம் ஏரியில் 99 ஏக்கர் பரப்பளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2,50,200 (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து இருநூறு) புதிய பனை நாற்றுகளை உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கான பனை விதைகளை மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 கிராம ஊராட்சிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு 1,40,000 (ஒரு இலட்சத்து நாற்பதாயிரம்) விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை விதைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு, எண்ணிக்கைகள் அடிப்படையில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் திரு. பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் ராஜபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லக்கண்ணாள், சாவித்ரி, உதவி பொறியாளர் மாதையன், பணி மேற்பார்வையாளர் நாகராஜன் மற்றும் வருவாய்த்துறை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், MGNREGS பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



