நாகர்கோவில், ஆக. 5 –
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், மற்றும் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற படகுப் போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் கன்னியாகுமரி பயணிகள் படகுத் துறையை விரிவாக்கம் செய்தல் பணிக்காக ரூ.20 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படகு தள விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று 5ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உயர்தரத்துடனும், விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து பயணசீட்டு வழங்குவதில் உள்ள நிறை குறைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடம் கேட்டறிந்தார்கள். மேலும் அவர் பயணிகளோடு பயணியாக நின்று பயணச்சீட்டு பெற்று கொண்டு படகில் பயணித்தார்.
நடைபெற்ற ஆய்வில் நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் முருகபூபதி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் விஸ்வநாதன், பொதப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



