தருமபுரி, ஜூலை 15 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும், பொது மக்களிடம் கழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை எடுத்துக் கூறியும், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, தருமபுரி தொகுதி பொறுப்பாளர் டி. செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் பாரி, நகரச் செயலாளர் நாட்டான் மாது மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



