தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக ரூ.56.10 லட்சம் மதிப்பில் விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மணி வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ ஆகியோர் சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தமிழக அரசு மூலம் உரிமைகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தசை பயிற்சியாளர், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர், கண் பரிசோதகர், மனநல ஆலோசகர், சிறப்பாசிரியர், தொழில் முறை பயிற்சியாளர் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இம்மையத்திற்கு வருகை புரிய இயலாத மாற்று திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று மருத்துவ சேவை அளிப்பதற்கு ஏதுவாக ரூ.56.10 லட்சம் மதிப்பிலான மறுவாழ்வு சேவை ஊர்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓரிருட சேவை மையத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



