நாகர்கோவில் மே 8
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து படகு மூலம் உயிர்த்தப்பி வந்தவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு கரை கொண்டு வந்து சேர்த்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த மரிய டென்னிஸ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய தயாளன், கலை தாஸ், அருந் தயாளன், ராஜேந்திரன், முனீஸ்வரன் ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஈரான் நாட்டில் உள்ள அரேபிய முதலாளி சையத் சவுத் ஜபாதி என்பவரின் படகில் அந்த நாட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். மாதந்தோறும் ஊதியம், வருடத்தில் ஒருமுறை சொந்த ஊர் சென்றுவர நிர்வாக செலவு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் அமர்த்தபட்டனர். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக இவர்களுக்கு எந்த ஊதியமும் கொடுக்காமல் மீன்பிடி தொழில் செய்ய வைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்கள் போகப்போக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் . ஊதியம் இல்லாததால் சொந்த ஊரில் குடும்பங்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் பட்டினிக்கு ஆளான இவர்கள் தங்களை ஊருக்கு விடும்படி அரேபிய முதலாளியிடம் கெஞ்சியும் இவர்களுடைய பாஸ்போர்ட் வாங்கி முடக்கி வைத்துக் கொண்டார். இந்நிலையில் ஆறு பேரும் ஈரான் நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் உயிர் தப்பி 16 நாட்கள் பயணித்து இந்திய கடல் எல்லையில் கேரளா கடல் பகுதிகளில் வந்து சேர்ந்தனர். அப்போது இவர்களுடைய படகில் டீசல் இல்லாததால் நடுக்கடலில் தத்தளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தெற்காசிய மீனவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருள் பணியாளர் சர்ச்சில் இந்திய கடலோர காவல் படையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஆறு மீனவர்களை உயிருடன் மீட்டு கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதனால் மீனவர்கள் ஆறு பேரும் உயிர் தப்பியதால் கடற்கரை கிராம மீனவ மக்கள் நிம்மதி அடைந்தனர்.



