நாகர்கோவில், ஜன. 26 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026-யொட்டி 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்த மாதிரி நடமாடும் செயல்விளக்க விழிப்புணர்வு வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று (25.01.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்கு பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஒப்புகை சீட்டில் எவ்வாறு சரி பார்ப்பது ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் உள்ள அடிப்படை அம்சங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் இவ்வாகனத்தின் வாயிலாக புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என கூறினார்.
முன்னதாக கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சர்.சி.வி. பூங்கா வரையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திரு.வினய்க்குமார் மீனா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



