இரணியல், ஏப். 2 –
இரணியல் பகுதி பட்டன்விளையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும். பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பூசாரி காலையில் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலில் இருந்த பித்தளை விளக்குகள் மற்றும் பாத்திரங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஊர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவிலில் பொருட்கள் திருட்டுப் போன தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. கோயில் நிர்வாகம் தரப்பில் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று கண்ணாட்டு விளை சிவசக்தி கோயிலில் பூஜை பொருள்கள், பாத்திரங்களும் திருடப்பட்டு இருந்தது. இது குறித்தும் கோயில் நிர்வாகிகள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திங்கள்சந்தை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழ்ச்செல்வி என்பவர் வீட்டில் சுமார் 3 பவுன் நகைகள் திருட்டு போனது. இது குறித்தும் இரணியல் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கோவில் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மாங்குழி பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


