நாகர்கோவில், ஆகஸ்ட் 18 –
ஆவணி முதல் ஞாயிற்று கிழமையான நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் வழிபாடு உகந்ததாக கருதப்படுகிறது. கேரள வழிபாடு அடிப்படையில் இந்த கோயிலில் பூஜைகள் நடக்கின்றன. கேரளாவில் ஆவணி மாத பிறப்பு சிறப்பாக கருதப்படும். அதன்படி நாகராஜா கோயிலும் ஆவணி மாத ஞாயிறு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மற்ற ஞாயிற்றுக்கிழமைகளை விட ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்துவார்கள்.
தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி நேற்று 17-ம் தேதி ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். ஆவணி மாத பிறப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதன்படி நேற்று அதிகாலையில் இருந்தே நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் தரிசனம் செய்தனர். நாகராஜா கோயில் வளாகத்தில் நாகர் சிலைகள் அமைந்துள்ளன.
இந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாகராஜரை வழிபட்ட பக்தர்கள் சிவன், அனந்த கிருஷ்ணர், பாலமுருகன், துர்க்கை அம்மன், தர்மசாஸ்தா சன்னதியில் வழிபாடு நடத்தினர். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று, நீதித்துறை சார்பில் கோயிலில் சிறப்பு அன்னதானம் நடந்தது. காலை 11 மணிக்கு அன்னதானம் தொடங்கியது.
பக்தர்கள் வசதிக்காக கோயிலில் தற்காலிக க்யூ செட் அமைத்திருந்தனர். ரூ.400 சிறப்பு கட்டணத்தில் சென்றவர்களுக்கு சில்வர் பாத்திரத்துடன், ஒரு லிட்டர் பால் பாயாசம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் தற்காலிக குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம், ஏற்பாடு செய்திருந்தனர். வடசேரி இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு சுவாமி வாகன பவுனியும் நடந்தது.



