கோவை, ஜுலை 20 –
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ரங்காஸ் அகாடமி பரதநாட்டிய பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக “டான்ஸ்சத்தான்” என்னும் பரதநாட்டியம் ஆடியப்படியே மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி கருமத்தம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி, 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரங்காஸ் பரதநாட்டிய பயிற்சி பள்ளியின் நிறுவனர், நடன ஆசிரியர் சுபா வசந்த் கூறுகையில்: தற்பொழுது அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளிலில் எங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பரதநாட்டியத்தின் மூலம் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கருதி, எங்களது நடனப் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த மூன்று வார குறுகிய கால இடைவேளையில் தொடர்ந்து பயிற்சி எடுத்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி உள்ளோம்.
2 கிலோமீட்டர் வரை பரதநாட்டியம் ஆடிக்கொண்டே மாரத்தான் என்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் இதை முழு மனதோடு ஏற்று நாங்கள் இந்த நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். 3 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்றனர். இந்தியாவில் இதுவரை போதைப் பொருளுக்கு எதிராக யாரும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியதில்லை. முதல் முறையாக எங்களது நடன பள்ளி மூலமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம்.
மேலும் இதுபோன்று போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை விரிவுபடுத்தி, தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து கோவையில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருளுக்கு எதிரான கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்வோம். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்க தவறுவதே போதைப் பழக்கத்திற்கு வழிவகுத்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்த கருமத்தம்பட்டி காவல்துறை, கிங் உடற்பயிற்சி கூடம், ஸ்ரீ கவி பியூட்டி பார்லர், மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.



